முகமலர்ச்சியோடு அலையும்
எனது தெருநாயிற்கு
மூன்று கால்கள் மட்டுமே.
அதன் தாவுதலுக்கும் ஓட்டத்திற்கும்
நோவே வராது.
தராசின் எடைக்கற்களைப் போன்று ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு வாழ்க்கை எடை.
எனக்குண்டான எடையின் மீது
குமட்டலும் விரக்தியும் பீறிடுகையில் தெருநாயினைத் தன்னம்பிக்கைத் தத்துவமாக படித்துக்கொள்வேன்.
சமீபமாக
பீறிடுதலைக் கட்டுக்குள் வைக்கமுடியவில்லை.
என்னை நானே கொல்வதற்கும் பயம்.
நிலத்திலும் இருக்கக் கூடாது
வானுக்குள்ளும் போய்விடக் கூடாது.
அரூப மரமான நட்டநடு அத்துவானமே
உலகின் உயரமான உச்சிக்கிளை.
அக்கிளையிலேறிதான் மீதி வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்.
சித்திரைத் திருவிழாவிற்கு மட்டும்
பூமிக்கு இறங்குவேன்.
பனையளவு வளர்ந்து
மூப்பேறிய தெருநாய்
என்னைப் பார்த்து தூரத்தில் போய்
உமிழ் தெறிக்க குரைக்கும்.
வருடத்திற்கு ஒரு முறை
வெறுமையைப் பார்த்து ஓலமிடும்
மூன்று கால் நாயினை
திருவிழா அன்றைக்கு மட்டும் கிறுக்கென அழைப்பார்கள்.



{முத்துராசா குமார் - நன்றி - அரூ இதழ்
- Art - C.Douglas}

http://aroo.space/2020/04/08/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95/

Comments